எல்லை தாண்டிய
தீவிரவாதியாய்,
என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனே!
உன் காதலெனும்
கண்ணி வெடியில் சிக்கி,
கணப்பொழுதில் நான்
சொர்க்கம் சென்றேன்.
உன் பார்வை ஸ்பரிசங்கள்
பட்ட இடமெல்லாம்,
என்னுள் ஏனோ
மோகத்தீயாய் பற்றி எரிகின்றது.
உன் சிரிப்பு ஏவுகணைகள்
என் மனதில் இறங்கி,
இன்பம் தரும் ஒரு
வலியை ஏற்படுத்துகின்றன.
என் கனவுப் பாசறையில்
நிதமும் நுழைந்து,
இரவு வேளைகளில்
வேவு பார்கிறாய்.
என் இயற்கை சீற்றங்களின் போது
அமைதியாய் அருகிலமர்ந்து,
தலை கோதி புன்முறுவல்
பொருளுதவி செய்கிறாய்.
பேச்சுவார்த்தைகளும்
பிரகடனங்களும், நம்முள்
காதலை வளர்க்க
நாளும் நடக்கட்டும்.
நாம், காதல் போர் நிறுத்த
ஒப்பந்தங்களை துறந்து,
திருமண தீவிரவாதத்தை
தொடர்ந்து கடைபிடிப்போம்.
இவண்
பாலாஜி
No comments:
Post a Comment